Delhi Crime: டெல்லியில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர், சில திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.


பகீர் தகவல்:


டெல்லியில் நேற்று பட்டப்பகலில் இளம்பெண் நர்கிஸ் கொலை செய்யப்பட்டட வழக்கில் அவரது உறவினரான இர்பான்  என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இளைஞர் இர்பான் சில திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன்படி, நர்கிஸை சுமார் 4 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். நெருங்கிய உறவினர் என்பதால் பெண் கேட்டு ஒரு நாள் நர்கிஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், நர்கிஸ்க்கு, இர்பானை பிடிக்கவில்லை.


அதனால் இர்பானை திருமணம் செய்ய நர்கிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், நர்கிஸை விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். நர்கிஸின் போனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும் வந்துள்ளார். ஆனால், நர்கிஸ் இர்பானை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த இர்பான் நர்கிஸை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.


3 நாட்களாக நர்கிசை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். அந்த மூன்று நாட்களும் நர்கிஸை பின் தொடர்ந்துள்ளார். நர்கிஸ் தினமும் செல்லும் பாதைகளில் தெரிந்து கொண்டுள்ளார். மேலும், நர்கிஸ் கல்லூரி முடித்துவிட்டு, பயிற்கு வகுப்புகளுக்கு சென்று வந்ததையும் பார்த்து நோட்டமிட்டுள்ளார். பின்னர், திட்டமிட்ட மூன்றாவது நாள் தோல்வி அடைந்த நிலையில், நேற்று பூங்காவில் நர்கிஸிடம் வாக்குவாதம் செய்து இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளதாக” வாக்குமூலம் அளித்தார். 


காதல் தொல்லை:


இந்த சம்பவம் குறித்து இளம்பெண் நர்கிஸின் சகோதரர் சமீர் கூறுகையில், "ஆறு மாதங்களுக்கு முன்பு, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தோம். என் சகோதரியும் இர்பானை திருமணம் செய்ய விரும்பவில்லை. இர்பான் உத்தர பிரதேச மாநிலம் அவுரியா பகுதியைச் சேர்ந்தவர். அங்கு ஸ்விக்கியில் டெலிவரி வேலை செய்து வருகிறார். இவர் ஐந்து முதல் 6 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டில் தங்கியுள்ளார்.


என் தந்தை, இர்பானுக்கு மெக்கானிக் பயற்சி கொடுத்தார். அங்கேயும், நர்கிஸை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அதனால் எனது தந்தை அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். பின்னர், ஒன்றரை ஆண்டுக்கு முன் மீண்டும் சுய தொழில் தொடங்குவதற்கு டெல்லி வந்திருந்த அவர், நேற்று எனது சகோதரியை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்” என்றார்.


என்ன நடந்தது? 


 மாணவி நர்கிஸ், டெல்லி கமலா நேரு கல்லூரிக்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் கல்லூரி முடிந்து தனது தோழியுடன் சென்றிருக்கிறார்.  அப்போது, அங்கு வந்த இர்பான், நர்கிஸிடம் முதலில் பேச்சு  கொடுத்துள்ளார். பின்னர், இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அந்த நபர், நர்கிஸை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கொடூரமாக அடித்துள்ளார். இதனால் நர்கிஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர், சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.  பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 28 வயதான இர்பானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.