Bengaluru: தாயின் அந்தரங்க புகைப்படங்களை காதலனுக்கு அனுப்பிய மகள்.. காத்திருந்த அதிர்ச்சி!
பெங்களூருவில் தாயின் அந்தரங்க புகைப்படங்களை காதலனுக்கு மகள் அனுப்பிய சம்பவமும், மாமியார் மருமகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவமும் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தாயின் அந்தரங்க புகைப்படங்களை தனது காதலனுக்கு மகள் பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்குள்ள பெங்களூருவில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “பெங்களூருவைச் சேர்ந்த அந்த பெண் தனது 23 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே மகள் தனது படிப்புக்கு தேவை என கூறி செல்போன் ஒன்றையும் பயன்படுத்தி வந்துள்ளார். இப்படியான நிலையில் அந்த இளம்பெண் காதலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. நாள்தோறும் செல்போன் மூலம் காதலனுடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த காதலனுடன் மகள் பேசியதை கண்டுபிடித்த அவரது தாய் செல்போனை பறித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளின் செல்போனை அவரது தாய் சரிபார்த்துள்ளார். அப்போது போட்டோ கேலரி பகுதியில் தன்னை ஆபாசமாக பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதேபோல் தங்களுடைய உறவுக்கார பெண்ணின் ஆபாச புகைப்படங்களும் அதில் இருந்தது.
மேலும் இந்த புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து தனது காதலன் என சொல்லப்பட்ட நபருக்கு அந்த இளம்பெண் பகிரவும் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவற்றையெல்லாம் விட கடந்த சில வாரங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் அந்த காதல் ஜோடி திருமணமும் செய்துள்ளது. இதனையெல்லாம் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியும், மன உளைச்சலுக்கும் ஆளான அப்பெண்ணின் தாய் நேராக போலீசில் சென்று புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகள் மற்றும் அவரது கணவர் செல்போன்களை பறித்து தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்
கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் சேகர் பாட்டீல் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சனா பாய் என்பவர் 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சேகர் பாட்டீல் வீட்டில் அஞ்சனா பாய் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த மரணம் தொடர்பாக அஞ்சனா தந்தை விஜய்குமார் போலீசில் புகாரளித்தார். அதில் சேகர் பாட்டீலின் அம்மா தனது மகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பப்படுத்தியதாகவும், அஞ்சனா பாயை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் எனது மகள் தற்கொலை செய்துக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சேகர் பாட்டீல், அவரது அம்மா மற்றும் அப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.























