தங்கக் கடத்தலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தலும் அத்தனை கிடுக்கிபிடிகளையும் தாண்டி சர்வதேச அளவில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.


மும்பை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சாகக்லேட் மற்றும் டாஃபிகளுக்குள்வைத்து மறைத்துக் கொண்டுவந்த சம்பவம் நடந்துள்ளது. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 24 கேரட் தங்கம் 369.670 கிராம் கடத்தி வரப்பட்டது. சுங்கத் துறையில் தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு மொத்தம் ரூ.18 லட்சத்து 89 ஆயிரத்து 014 ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் சூடானில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து ரூ.5.38 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது பெரிய அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






இது தொடர்பாக அப்போது மும்பை விமான நிலையம் பதிவிட்ட ட்வீட்டில், மும்பை விமான நிலைய அதிகாரிகள் 12 கிலோ எடை கொண்ட ரூ.5.38 கோடி மதிப்புள்ள தங்கத்தை சூடான் பயணியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளோம். அந்த நபர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். அவர் விமான நிலையத்திலிருந்து தப்பிக்க சிலர் உதவ போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு பேர் நாடு கடத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


 துபாயில் இருந்து தங்கத்தைக் கடத்தி வருவது என்பது தொடர்கதையாக உள்ளது. அங்கிருந்து விமானம் கிளம்பும்போது பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்படும். அப்போது எந்த பெட்டியில் தங்கம் உள்ளது என்பது தெரிந்துவிடும். அந்த விமானம் எந்த ஊருக்குச் செல்கிறது என்பதையறிந்து நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்கள். அந்தவகையில் உளவுத்துறையின் தகவல் சரியாக இருந்தால், கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள்.


அதேநேரம், விமான நிலைய சோதனையையும் மீறி 30 முதல் 40 சதவீதம் பேர் தப்பித்துவிடுகின்றனர். பாதியளவு நபர்கள்கூட பிடிபடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.


தங்கத்துக்கு முறையான கணக்குகளைக் காட்டாவிட்டால் அரசின் கஜானாவுக்கு அது சென்றுவிடும். பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தங்கம், வைரம், வெளிநாட்டு கரன்ஸி ஆகியவற்றைக் கொண்டு சென்றால் காபிபோசா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஆங்கிலத்தில் conservation of foreign exchange and prevention of smuggling act எனக் கூறுகின்ற்னர். அந்நிய செலாவணி மற்றும் கடத்தலைத் தடுக்கும் சட்டம் இது.


இதன்பேரில் பிடிபடுகிறவர்களை ரிமாண்ட் செய்ய முடியும். குண்டர் தடுப்புச் சட்டம் போலத்தான் இந்தச் சட்டம். பிணை என்பதே கிடையாது. வருவாய் புலனாய்வுத் துறை, சென்னை சுங்கத்துறை, மாநில அரசு ஆகியவற்றுக்கும் காபிபோசா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது