Crime : சென்னையில் மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மூதாட்டி கொலை


சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகரைச் சேர்ந்தவர் ஹரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சிவகாமி சுந்தரி (81). இவருடைய மகன் ஸ்ரீராம். இவர் பல்லாவரத்தில உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பானு. இவர் எல்ஐசியில் வேலை செய்து வருகிறார்.


சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மூதாட்டி சிவகாமி சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர், பணிமுடிந்து இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது சிவகாமி சுந்தரி வீட்டில் தூங்கிய நிலையில் இருந்ததால் அவரை எழுப்பாமல் விட்டுவிட்டனர். ஆனால் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் பார்த்தபோது அதில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.


உடனடியாக பதறிப்போய் தாய் சுந்தரியை பார்த்தபோது அவர் கழுத்தில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், தாய் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூதாட்டி சிவகாமி சுந்தரியின் உடலை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


15 சவரன் கொள்ளை


சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர் ஷோபா தலைமையில் அதிகாரிகள் வந்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து பழவந்தாங்கள் பகுதிக்கு ஓடியது. ஆனால் எதையும் கண்டுபிடிக்கவில்லை. 


இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மூதாட்டி சிவகாமி சுந்தரியை காலை 11 மணியளவில் கொலை செய்திருக்கலாம் எனவும் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை, பீரோவில் இருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்தது தெரியவந்தது.


விசாரணை தீவிரம்


கொள்ளையடிக்கப்பட்ட நகையானது 15 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தனிப்படைகள் அமைத்து ஆதம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வழக்கமாக வீட்டிற்கு வரக்கூடிய வேலைக்கார பெண்ணிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.