மணலி அருகே பன்றியை திருடியதாக 17 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


என்ன நடந்தது..?


மணலி சின்னமாத்தூர் ஜெயலட்சுமி சாலையை சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 17 வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை மணலி எட்டியப்பன் தெருவில் வசிக்கும் இவர்களது உறவினர்களான 27 வயதான தர்மா, 24 வயதான பாபு ஆகிய சகோதரர்கள் இருவரும் ஆட்டோ டிரைவரான சங்கர் வீட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். 


பின்னர் சஞ்சயிடம் ஏதோ பேச வேண்டும் என்று கூறி சஞ்சய் மற்றும் அவரது நண்பர் டில்லி ஆகிய இருவரையும் ஆட்டோவில் அழைத்துச்சென்றனர். அப்போது சகோதரர்கள் இருவரும் சஞ்சய், டில்லி இருவரையும் அடித்து இழுத்து சென்றனர்.


அடித்துக் கொலை:


இதனால் சந்தேகம் அடைந்த தேவி, தனது மகனை அடித்து கடத்திச் சென்றதாக தர்மா, பாபு ஆகிய இருவர் மீதும் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.


மதியம் வரை சஞ்சய் வீடு திரும்பி வராததால் அவரது உறவினர்கள் பால் பண்ணை காவல் நிலையம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்தநிலையில் சஞ்சயின் நண்பர் டில்லி மட்டும் வீடு திரும்பி வந்த நிலையில், அவரை மட்டும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்த தொடங்கினர். அதில் சஞ்சய் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக டில்லி அதிர்ச்சிகரமான வாக்குமூலம் ஒன்றை தந்தார். சகோதரர்களான தர்மா, பாபு இருவரும் பன்றி மேய்த்து விற்கும் தொழிலை செய்து வந்ததுள்ளனர். இந்த சூழலில் இவர்களுடைய பன்றிகளை திருடியதாக கூறி சஞ்சய் மற்றும் டில்லி இருவரையும் ஆட்டோவில் அழைத்துச்சென்றனர்.


நண்பர் கொடுத்த வாக்குமூலம்:


தொடர்ந்து, எட்டியப்பன் தெருவில் உள்ள தர்மாவின் வீட்டில் வைத்து சஞ்சையை அடித்து மிரட்டியுள்ளனர். எதுக்கும் செவிசாய்க்காததால் அவர்கள் இருவரும் இணைந்து சஞ்சயை கடப்பாரையால் அடித்துள்ளனர். அப்போது படுகாயம் அடைந்த சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆட்டோவில் எடுத்துச் சென்று விட்டதாக காவல்துறையினரிடம் டில்லி தெரிவித்தார்.


இதையடுத்து டில்லி சொன்ன தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தர்மா, பாபுவை பிடிக்க எட்டியப்பன் தெருவில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் சகோதரர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டதாக தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சஞ்சய் உடல் கட்டப்பட்ட சாக்கு மூட்டையை மணலி, ஹரி கிருஷ்ணாபுரம் சுடுகாடு அருகே உள்ள மழைநீர் கால் வாயில் வீசியதும் தெரியவந்தது. ஆனால், தற்போது வரை கால்வாயில் மழைநீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் சஞ்சயின் உடலை மீட்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். 


மேலும், இந்த கொலை தொடர்பாக சகோதரர்களான தர்மா, பாபு தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினால்தான் கொலைக்கான காரணம் மற்றும் சஞ்சயின் உடல் எங்கே இருக்கிறது என்பது தொடர்பான தகவல் தெரிய வரும்.