Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Affair Murder: தாய் கொண்டிருந்த தகாத உறவை அம்பலப்படுத்தி, தங்களது அப்பாவை கொன்ற குற்றவாளிகளுக்கு 3 குழந்தைகள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

Affair Murder: தாயின் தகாத உறவை வெளிப்படுத்தி, அப்பாவை கொன்ற குற்றவாளிகளுக்கு குழந்தைகள் தண்டனை பெற்றுக் கொடுத்த சம்பவம் ஆக்ராவில் நடைபெற்றுள்ளது.
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தகாத உறவை கண்டித்த கணவனை கொலை செய்ததாக, மனைவி, அவரது கள்ளக் காதலன் மற்றும் கள்ளக்காதலனின் நண்பர் ஆகிய 3 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தங்களது தாய் திருமணத்தை மீறி தகாத உறவு கொண்டிருந்ததாக, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் குழந்தைகள் அளித்த வாக்குமூலம் தான் இந்த குற்றத்தை உறுதிப்படுத்த மூலக்காரணமாக இருந்துள்ளது. இதனால் மூன்று குற்றவாளிகளுக்கும் தலா ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியன்று 34 வயதான ஆட்டோ ஓட்டுனரான ராம்வீர் சிங் காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் நடந்த விசாரணையில் ஊரில் இருந்த ஒரு கிணற்றில் இருந்து ராம் வீர் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி குசுமா தேவி (அப்போதைய வயது 28), அவரது காதலன் சுனில் குமார், மற்றும் தர்ம்வீர் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடற்கூறாய்வில் அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கடுமையாக தாக்கப்பட்டதில் கோமாவிற்கு சென்று அதன் பிறகு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குசுமா தேவி உள்ளிட்ட 3 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
வழக்கை திசைதிருப்ப முயற்சி:
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டை, எரிக்கப்பட்ட செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையின் போது கூட கொலையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறிய குற்றவாளிகள், உள்ளூர் ரவுடிகளுடன் ராம்வீர் சிங்கிற்கு தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் தான் கொலை செய்து இருப்பார்கள் என்றும் கூறி வழக்கை திசை திருப்ப முயற்சித்துள்ளனர். ஆனால், குசுமா தேவி பெற்ற குழந்தைகள் அளித்த புகார் அடிப்படையில், உண்மை அம்பலமாகியுள்ளது.
3 குழந்தைகளின் வாக்குமூலம்:
வழக்கின் இறுதிகட்ட விசாரணையில் ராம்வீர் சிங்கின் 15 வயது மகன் அளித்த வாக்குமூலத்தில், “எங்களது அம்மா, ஆட்டோ ஓட்டுனரான சுனில் குமார் என்பவருடன் இரண்டு வருடங்கள் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்தார். அவர் எங்களது வீட்டிற்கு வரும்போதெல்லாம் என்னையும், எனது சகோதரர்களையும் அம்மா அடிப்பார்கள். சுனில் குமாரையும், அவரது நண்பர் தர்ம்வீரையும் பலமுறை எங்கள் வீட்டின் அருகே பார்த்திருக்கிறேன். இதைபற்றி எனது தந்தையிடமும் கூறியுள்ளேன். எனது அப்பா ஆட்டோ ஓட்ட வெளியே செல்லும் நேரங்களில் சுனில் அமைதியாக எங்கள் வீட்டிற்குள் வந்து அறையில் எனது அம்மாவுடன் இருப்பார்” என நீதிபதி முன்பே தெரிவித்துள்ளான். அவரது சகோதரர்கள் ஆன 13 மற்றும் 8 வயதான இரண்டு சிறுவர்களும் இதையே நீதிபதி முன்பு தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், திருமணத்தை மீறிய உறவை கண்டித்ததன் விளைவாகவே ராம்வீர் சிங் கொல்லப்பட்டதாக உறுதி செய்த நீதிமன்றம், குசுமா தேவி உள்ளிட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.





















