'ஆருத்ரா'வில் போட்ட பணம் கிடைக்குமா? குழப்பத்தில் பலர்! இதுதான் இப்போதைய அப்டேட்!

அதே கதை, அதே டயலாக், அதே செட்டப் , ஆனால் ஆட்கள்தான் வேறு ஏமாறுவதோ மக்கள்தான் " விளம்பரத்தை நாங்கள் கொடுக்கவில்லை" என நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

விதவிதமா பேசிக்கிட்டாங்க

Continues below advertisement

சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக "ஹாட் டாபிக்" இதுதான். அட 'இங்க பாருப்பா' ஒரு விளம்பர வந்திருக்கு. இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு, மாசம் மாசம் 30 ஆயிரம் ரூபா வரைக்கும் வட்டி கொடுக்கிறாங்க, நாமளும் இதில் முதலீடு பண்ணலாமா. இது இங்க மட்டும் இல்லப்பா, பல்வேறு இடங்களில் நிறைய பேரு காசு போட்டு எடுத்து இருக்காங்களாம், நிறைய பேரு லட்சக்கணக்கில் முதலீடு பண்ணி சம்பாதிச்சு இருக்காங்களாம், இதுதான் "ஹைலைட்டான ஹாட் டாப்பி"க்காக பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்பேச்சு இப்போது , முழுமையாக மாறியுள்ளது,  " நல்லவேளை நான் போடல " என்பதுதான். என்னதான் ஆனது அந்த நிறுவனத்திற்கு , இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.




ஆரணியில் ஆருத்ரா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள சேவூர் கிராம பகுதியில் தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று, கடந்த 6ம் தேதி  தொடங்கப்பட்டது. பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்களகை கூறி டெபாசிட் தொகை வசூலிக்க கூடாது என்றும், எந்த ஒரு நிறுவனமும் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள வருவாய் துறை மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கிளைகள் தொடங்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது.

அட இது குட்டி சதுரங்க வேட்டை

இந்நிறுவனம் காஞ்சிபுரத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து சேவூர் கிராமத்தில் துவங்கப்பட்ட அந்த நிறுவனம், ஒரு கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதாகவும், தொடர்ந்து 12 மாதம் வழங்கப்படும் என்றும், மேலும் 2 தங்க காசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் டெபாசிட் செய்த பணத்திற்கான ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


மேலும், அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் கிளைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்த திட்டத்தால், அலுவலகம் திறந்த ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக தெரிகிறது. 'சதுரங்க வேட்டை படம் பாணியில் பணம் பறிக்க வேண்டுமென்றால் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியில், இந்த நிறுவனம் திறக்கபட்டுள்ளதாக,' சமூக வளைதலங்களில் பரவியது.

அதிரடி சோதனை

 பல செய்திகளிலும் இந்நிறுவனம் குறித்து செய்தி, வெளிவந்ததை தொடர்ந்து, நேற்று இந்த நிறுவனம் செயல்படும் 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள, சேவூர் கிராமத்தில் உள்ள ஆரூத்ரா கோல்டு கம்பெனியில் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி பழனி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.


இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தை பூட்டி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளங்காடு கிராமத்தில் ஆருத்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் அவர்களது உறவினர் மணிகண்டன் வீட்டில் 25,000 ரொக்கப்பணம் மற்றும் 362 கிராம் தங்க நகை 650 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரத்திலும் சோதனை நடைபெற்றது.

பறிமுதல் பண்ணது, 3.14 கோடி

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், மொத்தம் 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 சவரன் தங்க நகைகள், 44 செல்போன்கள், 6 லேப்டாப்கள், 48 கணினி ஹார்டு டிஸ்க்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ள 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.'


வழக்குப் பதிவு

ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது,420,406,120B, Banning of unregulated deposit schemes and ரிசர்வ் பேங்க் சட்டம் 1934 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் மேலும் தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க புலனாய்வு அதிகாரி eowtn7of2022@gmail.com ஐ தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டுமே குடிமக்கள் தங்கள் பணத்தை சேமிக்க / டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன

முக்கிய வங்கிகளில் 5%  அளவிற்கு மட்டுமே, வட்டியாக கொடுக்க முடிகிறது என்றால் எப்படி சில மாதங்களில் உருவாகும் நிறுவனத்தால், 30% 50 சதவீதம் அளவிற்கு கொடுக்க முடியும் என பொதுமக்கள் யோசித்தாலே போதும் இது போன்று ஏமாறாமல் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

நிறுவனம் தரப்பில் சொல்லப்படுவது என்ன

இது குறித்து ஆர்வத்துடன் நிறுவனத்தின் வழக்கறிஞர் நரேஷ் பாபு தெரிவிக்கையில், எங்கள் நிறுவனத்திற்கும் இது போன்ற  விளம்பரத்திற்கும், கவர்ச்சிகரமான திட்டத்திற்கும் சம்மதமில்லை, போலியான தகவல்கள் வெளி வருவதால் எங்களுடைய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நாங்கள் தங்கம் வாங்குவது விற்பது, ஈவன்ட் மேனேஜ்மென்ட், பெரிய பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் ஆகியவைதான் செய்து வருகிறோம். இது குறித்து காவல்துறையினரிடம் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


காவல்துறை சொல்வதென்ன?

இதுகுறித்து பொருளாதார குற்ற பிரிவு டி.எஸ்.பி. பழனி கூறுகையில், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ஆரணி கிளை தொடங்கி 18நாட்களில் 107 வாடிக்கையாளர்கள் சுமார் 1கோடியே 10லட்சம் ரூபாய் முதலீடாக செலுத்தி உள்ளனர். போதிய ஆவணங்கள் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் ஏதும் இல்லை ஆகையால் பொதுமக்கள் கவர்ச்சிகரமான திட்டத்தில் பணம் செலுத்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்மந்தபட்டவர்களை விரைவில் கைது செய்யபடும் என்றும் பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் சென்னை பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி பழனி தெரிவித்தார்.

உரிய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டுமே பணத்தை சேமிக்க வேண்டும் என்பது காவல்துறையினர் கோரிக்கையாக உள்ளது

Continues below advertisement
Sponsored Links by Taboola