சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (34). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேனாம்பேடு பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைதேகியைத் துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.

Continues below advertisement

கண்காணிப்புக் கேமரா காட்சிகள் தந்த திருப்பம்

இக்கொலை தொடர்பாக உண்மை நிலவரத்தைக் கண்டறியத் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளையும், அதில் பதிவான ஆட்டோவின் பதிவு எண்ணையும் வைத்துப் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த விசாரணையின் முடிவில், வழக்கில் யாருமே எதிர்பாராத திடீர் திருப்பம் ஏற்பட்டது. வைதேகியைக் கொலை செய்தது வேறு யாரோ மர்ம நபர்கள் அல்ல; அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுநருமான சின்னா (36) என்பவரேதான் என்பது அம்பலமானது.

ஆட்டோவில் நடந்த கொடூரம்

கணவன் சின்னாவுக்கு, மனைவி வைதேகியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. மேலும், அவர் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, அதனைச் சின்னா தொடர்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால், வைதேகி அதைப் பொருட்படுத்தாததால் ஆத்திரமடைந்த சின்னா, சம்பவத்தன்று தன் மனைவியை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற சின்னா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைதேகியின் கழுத்து, மார்பு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Continues below advertisement

போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கை

மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, மர்ம கும்பல் கொலை செய்தது போலச் சித்தரித்துவிட்டுச் சின்னா தலைமறைவாகத் தன் வீட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், கண்காணிப்புக் கேமரா ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பட்ட அம்பத்தூர் போலீசார், சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே சின்னாவைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.