மலேசியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ஆப்பிரிக்க வனப்பகுதியில் உள்ள அபூர்வ வகை 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தி வந்த மலேசிய நாட்டு பெண் பயணியையும், இந்த அபூர்வ வகை உயிரினங்களை வாங்கிச் செல்ல வந்திருந்த, சென்னையைச் சேர்ந்த ஆண் ஒருவரையும், சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.


சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம்


மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி பரிசோதித்தனர். அப்போது மலேசிய நாட்டில் இருந்து, பெண் ஒருவர் சுற்றுலா பயணியாக, இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் இரண்டு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகள் வைத்திருந்தார். அந்தக் கூடைகளில் என்ன இருக்கிறது? என்று சுங்க அதிகாரிகள் கேட்டபோது, சரியான பதில் கூறாமல், மாறி மாறி பேசினார்.


ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள்


இதை அடுத்து சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள், அந்தப் பெண் பயணியை நிறுத்தி, அவர் வைத்திருந்த கூடைகளை திறந்து பார்த்து பரிசோதித்தனர். அந்தக் கூடைக்குள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்தக் கூடைகளில் (green Lguana) எனப்படும் ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் 52 உயிருடன் இருந்தன. அதோடு ஜியாமங்க் ஜிப்பான் என்ற ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் 4 இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து மலேசிய பெண் பயணியை வெளியில் விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். 


மலேசிய பெண் பயணியிடம் விசாரணை


அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, மலேசிய பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவர் கடத்திக் கொண்டு வந்த உயிரினங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது இந்தப் பெண் பயணி கொண்டு வந்துள்ள இந்த உயிரினங்களை வாங்கி செல்வதற்காக, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் காத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து சுங்கு அதிகாரிகள் அந்த ஆணையும் கைது செய்தனர்.


இவைகள் அனைத்துமே ஆப்பிரிக்க வனப்பகுதியில் காணப்படும் உயிரினங்கள். இவைகள் பல்வேறு நோய்க்கிருமிகள் உடன் கூடியவைகள். இந்த உயிரினங்களை, நமது நாட்டுக்குள் அனுமதித்தால், பல்வேறு நோய்க்கிருமிகள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் பறவைகள் போன்றவைகளுக்கும் பரவிவிடும். இவைகள் மிகவும் ஆபத்தானவைகள். எனவே இவைகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கே, எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில், திருப்பி அனுப்பும் படியும் சுங்கத்துறைக்கு அறிவுறுத்தினர். அதோடு அதற்கான செலவவினங்களையும், கடத்தல் பயணி மற்றும் அதை வாங்க வந்திருந்த மற்றொரு கடத்தல் ஆசாமி ஆகியோரிடம் வசூலிக்கவும் கூறினார்கள். 


புழல் சிறையில் அடைத்தனர்


அதன்படி சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அதிகாலை சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானத்தில், இந்த 56 உயிரினங்களையும், மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்பினர். அதோடு மலேசிய பெண் பயணி, இந்த உயிரினங்களை வாங்க வந்திருந்த, ஆண் ஆகிய இருவரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி விசாரணை நடத்தினர். அதன்பின்பு இருவரையும் சென்னை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.