கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் , புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கருணாகரன் என்ற கருணா (22) என்பவர் அழைத்துச் சென்று திருமணம் செய்து, கட்டாய பாலியல் உறவு கொண்டு கொடுமைப்படுத்தியதாக, சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 


 

அதன் பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்ததில் , புகார் உண்மையென தெரிய வந்ததின் பேரில், போக்சோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கருணாகரன் 10.02.2016 அன்று கைது செய்து , நீதி மன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி , கருணா (எ) கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

 



 

வயதான மூதாட்டியை கட்டிப் போட்டு 6 சவரன் நகை கொள்ளை

 

சென்னை திரு.வி.க நகர் கென்னடி சதுக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வந்தா ஜெயகுமாரி (60) இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகள் கிருஷ்ணா வினிதா என்பவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கிருஷ்ணா வினிதா கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று  வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு மதியம் 11 மணி அளவில் அஸ்வந்தா ஜெயகுமாரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் வீட்டின் உள்ளே வந்து அஸ்வந்தா ஜெயக்குமாரியை தாக்கி வீட்டிலிருந்த டவல் மற்றும் புடவையால் கை கால்களை கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த 6 சவரன் தங்க நகை 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றார்.

 


 

அதன் பிறகு அஸ்வந்தா ஜெயக்குமாரிகை கட்டுகளை அவிழ்க்க முடியாமல் அப்படியே படுத்துக் கொண்டு இருந்துள்ளார். மதியம் 3 மணியளவில் பக்கத்து வீட்டிலுள்ள சிறுவன் சென்று பார்த்த போது பாட்டி கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனடியாக வீட்டின் உரிமையாளர் மல்லிகா என்பவருக்கு சிறுவன் தகவல் தெரிவித்தான். அதன் பேரில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று அஸ்வந்தா ஜெயக்குமாரியை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது அவர் மேல் சகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.