சென்னை கொடுங்கையூர் சின்னான்டி மடம் பகுதியை சேர்ந்தவர் மணி (29). இவர் மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்டெல்லா மேரி என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகன் மற்றும் ஒரு வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக மணி தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் அதனை திருப்பி சரிவர கொடுக்க முடியாததால் அடிக்கடி வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மணியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து வந்த நபர் ஒருவர் மணியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கடனை கட்ட முடியுமா முடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அவமானம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாதபோது தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணியின் மனைவி ஸ்டெல்லா மேரி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் எனது கணவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதற்கு காரணமான வங்கி மற்றும் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரிடம் தகராறில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



 

போதை பொருள் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 12ஆம் தேதி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமின் எனும் போதைப் பொருளை விற்பனை செய்த இரண்டு பேர் மற்றும் அதனை வாங்க வந்த மூன்று பேர் என 5 பேரை பிடித்து புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டேரி தசாமகான்  அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த அஜிசுல்லா (25) என்ற நபர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

 



 

இவரை புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை இளைஞர்களுக்கு விற்றதை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அஜிசுல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.