"திருமணம் ஆகாத விரக்தியில் இளம் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாளிலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது."
திருமணம் ஆகாத விரக்தி
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கும் மகனுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், இளைய மகள் தீபிகா (28), எம்பிஏ (MBA) பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளாகத் தீவிரமாக வரன் தேடி வந்தும், பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்துள்ளது.
இதனால் தீபிகா கடும் மன உளைச்சலிலும் விரக்தியிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபிகாவின் பிறந்த நாளான நேற்று, அவரது பெற்றோர் மகளுடன் கோவிலுக்குச் செல்வதற்காகப் பூஜை சாமான்களை வாங்கி வைத்துவிட்டுத் தயாராக இருந்துள்ளனர். அப்போது, குளித்துவிட்டு வருவதாகக் கூறி கழிவறைக்குச் சென்ற தீபிகா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இளம் பெண் தற்கொலை
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டியும் பதில் வராததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கழிவறையில் இருந்த ஷவரில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தீபிகா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், தீபிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது பிறந்த நாளிலேயே இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).