பப்ஜி என்ற இணையதள விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மதன் தற்போது சிறையில் உள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர்.


இந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 600 பக்கங்கள் இடம்பெற்றுள்ளது. மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான வழக்கில் மொத்தம் 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பப்ஜி மதன் மீது மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தநிலையில், மொத்தம் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.




இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூபாய் 2 ஆயிரத்து 848 நபர்களிடம் ரூபாய் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மதனின் மனைவி கிருத்திகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, பப்ஜி விளையாட்டில் சிறப்பாக ஆடிவந்த மதன் மற்ற சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பப்ஜி விளையாட்டை கற்றுத் தந்துள்ளனர். பின்னர், அப்போது பெண்களிடமும், சிறுவர்களிடமும் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த ஆபாச பேச்சை தனது யூ டியூப் தொலைக்காட்சியிலும் வீடியோவாக தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். இதையடுத்து, பலரும் மதனுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.  சிலர் மதனுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.




மதனுக்கு கண்டனங்கள் தெரிவித்தவர்களுக்கும், மதனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தவர்களுக்கும் மதன் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் பலரும் மதன் மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் மதனை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.


மதன் மீது குற்றம் குறித்த விளக்கமளித்த மதனின் மனைவி கிருத்திகா, தனது கணவர் மதன் தினசரி கடினமாக உழைத்து 20 மணிநேரம் வீடியோவிற்காக செலவிட்டே இந்த பணத்தை சம்பாதித்ததாகவும், தனக்கும் மதனின் யூ டியூப் தொலைக்காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.