காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புள்ளம்பாக்கம் சாலை திருமுக்கூடல் ,  பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த அன்பரசு என்பவரின் 30 வயது மகள் பிரியா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவுக்கு திருமணம் நடைபெற்று கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் பிரியாவுக்கு தற்சமயம் 7 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.




மறுமணம் செய்து கொண்ட தம்பதியினர்


இந்நிலையில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், தாயார் குளம், முடக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் தீனதயாளனுடன் கடந்தாண்டு மறுமணம் நடந்துள்ளது. பிரியாவின் முதல் திருமணம் மற்றும் குழந்தை இருப்பது தெரிந்தே, தீனதயாளன் பிரியாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீனதயாளனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி பிள்ளைகள் உள்ள நிலையில், விவகாரத்தை பெற்று விட்டதாக ஏமாற்றி பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  மேலும் தீனதயாளன் தான் கோவில் வேலை செய்வதாகவும், தறி நெய்யும் வேலையிலும் ஈடுபடுவதாகவும் கூறி பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் ஆன மூன்று நாட்களிலேயே பிரியாவின் வீட்டில் போட்ட 10 சவரன் நகைகளையும் அடகு வைத்து செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.


தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு


மேலும் திருநங்கைகளோடு தகாத தொடர்பு வைத்துக்கொண்டு மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் தீனதயாளன். இது பிடிக்காத பிரியா அந்த வேலையை விட்டு விடும்படியும், தறி நெய்யும் வேலையை தொடர்ந்து செய்யவும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது, இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.




அமாவாசை அன்று மாந்திரீக பூஜை


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாவாசை இரவு பிரியாவை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரோடு இணைந்து பிரியாவை கட்டாயப்படுத்தி மாந்திரீக பூஜை நடத்தி இருக்கிறார் தீனதயாளன். இதுகுறித்து வெளியில் சொன்னால் உன் அண்ணனை கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார் தீனதயாளன். இதனால் நிலைகுலைந்து, மனம் உடைந்து போன பிரியா அங்கிருந்து தன் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டுக்கு எப்படியாவது தப்பி வந்து விட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். ஆனால் பிரியாவிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்துள்ளனர் தீனதயாளன் குடும்பத்தினர். 


மேலும் பிரியா தன்தாய் வீட்டிற்கு வந்தால் குழந்தையை பிடுங்கி வைத்துக்கொண்டு பிரியாவை மட்டும் தனியாக அனுப்பி உள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத பிரியா தன் தாய் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன பிரியாவின் குடும்பத்தார் பிரியாவை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் குழந்தையை பிரியாவின் கண்ணில் காட்டாமல் நாடகமாகியுள்ளனர் தீனதயாளன் மற்றும் அவரது குடும்பத்தினர்.


மனம் உடைந்த பிரியா


இந்த நிலையில் குழந்தையை பார்க்க முடியாத இயக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட பிரியா மறுநாள் காலை தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியாவின் அண்ணன் சதீஷ்குமார் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.