கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் யூனிஸ். 28 வயதான இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (25). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த திவ்ய பாரதி, கடந்த 27ம் தேதியன்று பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த 29 ம் தேதியன்று திவ்யபாரதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கு தொடர்ந்து தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய இருந்தனர்.


இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திவ்யபாரதி தூங்கிக் கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். திவ்யபாரதி உறக்கம் கலைந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திரண்டு வந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.




இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் அருகில் இருந்த பள்ளிவாசலில் கண்காணிப்பு கேமராவில், இரு பெண்கள் கட்டப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும் அவர்கள் கோவை செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது.


இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு குழந்தையை கடத்திச் சென்ற கேரள மாநிலம் கொடுவாயூர் பகுதியை சேர்ந்த ஜெமீனா மற்றும் மற்றொரு சிறுமியை காவல் துறையினர் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட தாய் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.


குழந்தை கடத்தலின் பின்னணி


பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், அப்பகுதியில் சுற்றியிருந்த 150 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் இருவரும் குழந்தையை கடத்திச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. பேருந்தில் ஏறிச் சென்ற இருவரும், ஆட்டோவிற்கு மாறி இரயில் நிலையம் சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநரை பிடித்து காவல் துறையினர் விசாரித்த போது, இருவரும் இரயில் மூலம் பாலக்காடு சென்றது தெரியவந்தது. பாலக்காடு இரயில் நிலையத்தில் இருந்து இருவரும் ஆட்டோவில் சென்றதை அறிந்து, பாலக்காடு காவல் துறையினர் உதவியுடன் பொள்ளாச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கொடுவாயூர் பகுதியை சேர்ந்த ஜெமீனாவை குழந்தையையுடன் இருந்த போது, கைது செய்து குழந்தையை காவல் துறையினர் மீட்டனர்.




ஜெமினாவிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், அவர் தன் கணவரிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டதன் பேரில், ஜெமினா தான் கர்ப்பமாக இருப்பது போல் போலியாக நடித்து வந்த அவர், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய்யாக கூறியுள்ளார். பின்னர் மணிகண்டனிடம் பிறந்த குழந்தையை காட்ட வேண்டும் என்பதற்காக இந்தக் குழந்தையை கடத்திச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண