கோவையில் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்து கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 22 வயதான இளம் பெண். இவர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பத்து மாதங்களாக வசித்து வருகிறார். மேலும் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகியாக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 28 ம் தேதியன்று பணி நிமித்தமாக அப்பெண் திருப்பூருக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு நேரத்தில் கோவை திரும்பிய அப்பெண், ஹோப் காலேஜ் பகுதிக்கு வந்துள்ளார்.


அங்கிருந்து செல்வபுரத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக ரபிடோ ஆட்டோவை புக் செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் வந்து அப்பெண்ணை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். கோவை - அவிநாசி சாலையில் உள்ள பன் மால் பகுதியில் ஆட்டோ சென்ற போது, ஆட்டோவில் இருந்த பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் கடத்த முயற்சிப்பதை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.


இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் இருந்து அப்பெண் கீழே குதித்து தப்பினார். இதில் அப்பெண்ணிற்கு முதுகு, தலை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அப்பகுதியில் இருந்து தப்பியோடினார். இது குறித்து அப்பெண் தனது நண்பர்களுக்கு செல்போனில் அழைத்து   தகவல் அளித்தார். இதன் பேரில் வந்த அவரது நண்பர்கள் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவிநாசி சாலையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இது குறித்து அப்பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது சாதிக் என்ற 43 வயதான ஆட்டோ ஓட்டுநர், இரவு நேரத்தில் ஆட்டோவில் ஏறிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து முகமது சாதிக் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் முக்கிய சாலைகளில் ஒன்றான அவிநாசி சாலையில் இரவு நேரத்தில் ஆட்டோவில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்து கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண