விழுப்புரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும், A+ தர ரவுடியாகவும் இருந்து வரும் அறிவழகனிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பிரியங்கா என்பவர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.


அப்போது விசாரணை நடத்த வந்த பெண் உதவி ஆய்வாளர் பிரியங்காவிடம் பிரபல ரவுடி அறிவழகனும், அவரது ஆட்களும் ஆபாசமாக பேசி தாக்க முயற்சித்துள்ளனர்.  இது குறித்து பெண் உதவி ஆய்வாளர் பிரியங்கா அளித்த புகாரின் பேரில் பிரபல ரவு அறிவழகன் மற்றும் ஜோதி என்கிற பார்த்திபன் உள்ளிட்ட 2 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இதனைத்தொடர்ந்து பிரபல ரவுடி அறிவழகன், ஜோதி என்கிற பார்த்திபன் உள்ளிட்ட 2 பேரையும் விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து விழுப்புரத்தில் உள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.