கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் அருகில் 48 வயதான நபர் ஒருவர் தன் மனைவியையும், மனைவியின் நண்பர்களையும் குற்றம் சாட்டி பேஸ்புக்கில் பதிவு எழுதிவிட்டு, தனது காரை லாரி மீது மோதியதில் அவரும், அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். 


கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் அருகில் உள்ள அட்டிங்கல் பகுதியில் தந்தை - மகன் இருவரும் லாரி மோதி உயிரிழந்த வழக்கு தற்கொலை வழக்கு எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், லாரியில் மோதிய காரின் உடைந்த பகுதிகளிடையே இருந்த தற்கொலைக் குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளனர். 


கேரளாவில் திருவனந்தபுரத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் பிரகாஷ் தேவராஜன். நேற்று காலை தன் மகளை மட்டும் வீட்டில் தனியாக விட்டு, தன் 11 வயது மகன் சிவதேவுடன் நெடுமங்காட்டில் உள்ள தனது குடும்ப வீட்டிற்குக் காரில் சென்றுள்ளார். அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு இருவரும் வீட்டுக்குக் கிளம்பியுள்ளனர். எனினும், இரவு 11 மணிக்கு பிரகாஷ் தனது  பேஸ்புக் பக்கத்தில் ஐந்து படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் `என் மரணத்திற்கு இவர்களே காரணம். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார். அந்தப் படங்களுள் அவரது மனைவியின் படமும் இடம்பெற்றுள்ளது. 



இதனைக் கண்ட உறவினர்கள் காவல்துறையினரைத் தொடர்புகொண்டுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்குள் பிரகாஷும், அவரது மகன் சிவதேவும் சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. 


இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரகாஷின் மனைவி மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் சுமூக உறவு இல்லை எனவும், அவர் பல முறை வற்புறுத்தியும் அவரது மனைவி நாடு திரும்ப மறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. 


காரில் இருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் நால்வரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தனது மனைவியும் மனைவியின் நண்பர்களும் தன்னை இந்த முடிவுக்குத் தள்ளியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், `அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரியவில்லை.. ஆனால் என் மனைவியும், மனைவியின் நண்பர்களும் என்னை மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்தனர்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கடிதத்தில் தன் மகள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் பிரகாஷ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண