தருமபுரி மாவட்டம் அரூர் கோவிந்தசாமி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி என்பவர், அரூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை வேலூரில் உள்ள தங்களது குல தெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று உள்ளார்.

 


 

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வெளி கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து வீட்டில் நுழைந்து பார்த்த போது வீட்டின் பிரதான நுழைவு வாசல் உடைக்கப்பட்டும் உள்ளிருந்த பீரோ, கப்போர்டுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதன் உள்ளே இருந்த துணி உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் கீழே சிதறி கிடந்துள்ளது. இதனை கண்டு  மணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 


 

தொடர்ந்து வீட்டில் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்து பார்த்ததில், தங்க நகை வைத்திருந்த பெட்டிகள், திறந்த நிலையில் சிதறி கிடந்துள்ளது. இதில் 3 சவரன் மற்றும் 1 சவரன் தங்க சங்கிலி உள்ளிட்ட சிறு சிறு தங்க நகைகள் என சுமார் 6 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதே போல் வீட்டில் வைத்திருந்த சுமார் 1.25 லட்சம்  ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணத்தை எடுத்து சென்றுள்ளனர். மேலும் திருடிய பணத்தை, டையினிங் ஹாலில் லைட் மற்றும் பேன் போட்டுக் கொண்டு ஜாலியாக எண்ணியுள்ளனர். 

 


 

இதனைத் தொடர்ந்து மணி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டினுள் நுழைந்து சோதனை செய்தனர். மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று காவல் துறையினர் விசாரணை  நடத்தினர். மேலும் அந்த தெருக்களில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், இரவு நேரங்களில் நடமாடியவர்களின் காட்சி ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பது குறித்து தனிப்படை காவல் துறையினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.

 


 

தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வர வழைத்து, வாய்க்கால், பீரோ உள்ளிட்ட வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த பகுதிகளில் தடயங்களை காவல் துறையினர் சேகரித்தனர். அரூர் பகுதியில் நேற்று கோயிலில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில், தொடர்ந்து இன்றும் அருர் நகர பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவலுஹதுறையினர் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியினை அதிகப்படுத்த வேண்டும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.