சூட்கேஸிற்குள் நெளிந்த மர்ம உயிரினம்! தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் சிக்கின!
"சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட பாம்புகள் உள்ளிட்ட 30 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டது."

தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ஆப்பிரிக்கா, சகாரா பாலைவனம், கிழக்கு ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா வனப்பகுதிகளில் உள்ள அபூர்வமாக மலைப்பாம்புகள், கருப்பு கலர் கார்ன் பாம்புகள், அழிந்து வரும் அபூர்வ வகை பாம்புகள், அபூர்வ வகை ஆமைகள், உடும்புகள்,பல்லிகள் உள்ளிட்ட 31, அபூர்வ வகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையம்
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, பயணிகள் விமானம் ஒன்று, நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சங்கத்துறை ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள், ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் விசாவில் தாய்லாந்துக்கு போய்விட்டு, உடனடியாக திரும்பி வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்தநிலையில் சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது இளைஞர் ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, மறுநாளே, தாய்லாந்தில் இருந்து இந்த விமானத்தில் திரும்பி வந்து இருந்தார். அவர் மீது சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதை அடுத்து அந்த சென்னை பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்தது. அவர் வைத்திருந்த பெரிய அளவிலான சூட்கேஸை திறந்து பார்த்து பரிசோதித்தனர்.
அபூர்வ வகை வன உயிரினங்கள்
அதனுள் அபூர்வ வகை வன உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆப்பிரிக்க கண்டம் மற்றும் சகாரா பாலைவனம் பகுதிகளில் மட்டும் காணப்படும் அழிந்து வரும் அபூர்வ வகை சல்கட்டா ஆமைகள் 9, ஊர்வன வகையைச் சேர்ந்த வகையைச் சேர்ந்த, தென் அமெரிக்கா மற்றும் கரிபிய தீவுகளிலும் காணப்படக்கூடிய, ஒருவகை அபூர்வ பல்லிகள் 4, ஈஸ்டன் வாட்டர் டிராகன் எனப்படும் கிழக்கு ஆஸ்திரிலேயா பகுதியில் வசிக்கக்கூடிய அபூர்வ வகை உயிரினம், ராயல் பைத்தான் என்று அழைக்கப்படும் பந்து போல் சுருள கூடிய, ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட விஷமற்ற மலைப்பாம்புகள் 12, ஆப்பிரிக்க வனப்பகுதியில் வசிக்கக்கூடிய அல்பைனோ கார்ன் கருப்பு நிற சிவப்பு கண்கள் உடைய விஷமற்ற பாம்பு ஆகியவை இருந்தன.
மேலும் நீல நாக்கு உடைய ஆஸ்திரேலியா இனமான, பல்லி போன்ற உடும்பு வகைகளைச் சேர்ந்த அபூர்வ விலங்குகள் 3, வெள்ளை நிற அரசை பாம்பு எனப்படும் ஒயிட்சைட் கிங் ஸ்னேக் 1, இது கொடிய விஷம் வாய்ந்த நாகப்பாம்புகளை பிடித்து, உணவாக உட்கொள்ளக் கூடியது. ஆனால் இந்தப் பாம்புக்கு விஷம் கிடையாது. இது இந்தியாவில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நீலகிரி மாவட்டம் ஆகிய இடங்களில் அபூர்வமாக, காணப்பட்டாலும், ஆப்பிரிக்கா வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒன்றிரண்டு மட்டும் வசிக்கின்றன.
இவ்வாறு அபூர்வ வகை பாம்புகள், ஆமைகள், பல்லிகள், உடும்புகள் மொத்தம் 31 இருந்தன. இவைகள் அனைத்தும் உயிருடன், ஊர்ந்து கொண்டு இருந்ததால், அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அந்த சூட்கேசில், உயிரினங்கள் சுவாசிக்க காற்று செல்லக்கூடிய விதத்தில், சிறிய சிறிய துவாரங்களும் போடப்பட்டிருந்தன.
குருவியாக பயன்படுத்தப்பட்ட பயணி
இதை அடுத்து அந்த பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து விசாரித்தனர். அப்போது அந்தப் பயணியை சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபர், கடத்தல் குருவியாக பயன்படுத்தி, தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி, இந்த வன உயிரினங்களை கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து வன உயிரினங்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், மேலும் விசாரித்த போது, இந்த உயிரினங்கள் அனைத்தும் முறையான மருத்துவ பரிசோதனை, சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் அனுமதி, இன்றி சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த விலங்குகளை இந்தியாவுக்கும் அனுமதித்தால், அதன் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள், நமது நாட்டில் மனிதர்களுக்கும், வன விலங்கு உயிரினங்களுக்கும் பரவி, பல்வேறு விதமான புதிய நோய்கள் உருவாகிவிடும் என்பதால், இவைகளை மீண்டும் எந்த நாட்டில் இருந்து, எந்த விமானத்தில் வந்ததோ? அந்த நாட்டுக்கு, அதே விமானத்தில் திருப்பி அனுப்புவதற்கு முடிவு செய்தனர். அதோடு அதற்காகவும் செலவுகளை, அந்த கடத்தல் பயணியிடம் வசூலிக்கவும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து தாய்லாந்து சென்ற பயணிகள் விமானத்தில், இந்த கடத்தல் உயிரினங்கள் அனைத்தும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.























