சென்னை அடுத்த ஊரப்பாக்கம்  பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்


 


 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம்



கர்நாடக மாநிலம்  தொப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சஞ்சம் பண்ணன்,  இவரது இளைய சகோதரர் அனுமந்தப்பா  ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.  இவர்கள் சென்னை புறநகர் பகுதியில் அனுமன்,  ராமர் உள்ளிட்ட வேடங்களை போட்டுக் கொண்டு  யாசகம்   தொழிலாக வைத்து வந்துள்ளனர்.  20 வருடங்களுக்கு மேலாக, இவர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.   தற்பொழுது இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம்  வண்டலூர் அடுத்துள்ள  ஊரப்பாக்கம் பகுதியில்  உள்ள செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில்  தங்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.




 மாற்றுத்திறனாளி சிறுவர்கள்


இதில்  சஞ்சம் பண்ணன்   என்பவருக்கு  15 வயதில் சுரேஷ் என்ற மகனும் 10 வயதில் ரவி என்ற மகனும் உள்ளனர். இதில் சுரேஷ் என்ற சிறுவன் காது கேட்காத  மாற்றுத்திறனாளி,  அதே போன்று ரவி என்ற  சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அனுமந்தப்பாவிற்கு மஞ்சுநாத் ( வயது 11 ) என்ற மகனும் உள்ளனர்.  சிறுவர்கள் மூன்று பேரும் கர்நாடக மாநிலத்தில் தங்களது, பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.






ரயில் மோதி விபத்து


 தற்பொழுது பள்ளி தொடர் விடுமுறை நாட்கள் என்பதால்  தாய் தந்தையுடன் விடுமுறை செலவு செய்வதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஊரப்பாக்கம் வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் ஊரப்பாக்கம் அருகே  ரயில்வே தண்டவாளத்தின், அருகே விளையாடிக் கொண்டிருந்த, ரயில்வே தண்டவாளத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் 3 சிறுவர்கள் மீது மோதி உள்ளது.


தூக்கி வீசப்பட்ட 3  சிறுவர்கள் பலி



மூன்று சிறுவர்களும் அங்கிருந்து தூக்கி  வீசப்பட்டுள்ளனர். கொடூரமாக நடைபெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அருகே இருந்த பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி  உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசாரம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




 


 தொடரும் ரயில் விபத்து


சென்னை புறநகர் பகுதிகளில் அவப்பொழுது, இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாம்பரத்திலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரையில் உள்ள, ரயில்வே தண்டவாளம் பகுதியில் இந்த விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதிகளவு குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் , பொதுமக்கள் பலரும்  தடியை மீறி ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதால், இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைத்து , பொதுமக்கள் சென்று வர வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.