சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு டிரெய்லர் லாரியும் லாரியும் மோதியதில் ஒன்பது பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் குடும்ப விழாவில் கலந்து கொள்ள பன்சாரி கிராமத்திற்குச் சென்றிருந்தது. அப்போது இந்த விபத்து நிகழ்ந்தது. திரும்பி வரும் போது, ​​அவர்கள் பயணித்த லாரி ராய்ப்பூர்-பலோடாபஜார் சாலையில் சரகான் அருகே ஒரு டிரெய்லருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஒன்பது பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து போலீசார் விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் கூறுகையில், ”மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.