SBI Debit Card Charges: பாரத் ஸ்டேட் வங்கி  குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.


பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ.:


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பெற்றுள்ளது.  கடந்த 1955ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியில், கடந்த 2017ம் ஆண்டு YONO எனப்படும் டிஜிட்டல் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, 6 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களுடன் நாட்டின் மிகவும் நம்பகமான மொபைல் பேங்கிங் செயலியாக உருவெடுத்துள்ளது.


இந்த நிலையில், எஸ்பிஐ டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி,  பாரத் ஸ்டேட் வங்கி  குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதில் குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை ரூ.75 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 


ஆனால், இது குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, கிளாசிக், சில்வர், குளோபல், பிளாட்டினம், யுவா, கோல்டு, காம்போ, காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை  எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. 


எவ்வளவு தெரியுமா?


எஸ்.பி.ஐ. அறிவிப்பின்படி, கிளாசிக், சில்வர் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.125 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.200ஆக உயர்த்தியுள்ளது. யுவா, கோல்ட், காம்போ டெபிட் கார்டுகளுக்கு தற்போது ரூ.175 வசூலிக்கப்பட்டிருந்தது. இதில், ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக உயர்த்தியுள்ளது எஸ்பிஐ. 


பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு தொகை ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.325 ஆக உயர்த்தியுள்ளது.  மேலும், பிரைட் பிரியம் டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.350 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.425 ஆக உயர்த்தியுள்ளது எஸ்பிஐ.


அதேபோல, டெபிட் கார்டை மாற்றுவது போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. அதன்படி, டெபிட் கார்டு பின்னை மாற்றுவதற்கு ஜிஎஸ்டி இல்லாமல் 50 ரூபாய் வசூலிக்கப்படும். டெபிட் கார்டை மாற்றுவது போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்த அனைத்து கட்டணங்களும் 18 சதவீத ஜிஎஸ்டிக்கு உட்பட்டது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.  இந்த கட்டண உயர்வு அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதேபோல, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டில் கட்டணம் செலுத்தினால் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாது என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. 


முன்னதாக, வெளியான  அறிவிப்பில் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களர்கள் குறைந்தபட்ச இருப்பானையை பராமரிக்கவில்லையெனில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.12 வசூலிக்கப்படும்  என்று தெரிவித்திருந்தது.