RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
RBI Monetary Policy Meeting: சர்வதேச போர் பதற்றங்களுக்கு மத்தியில் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது.

RBI Monetary Policy Meeting: குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 5.25 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ
சர்வதேச போர் பதற்றங்களுக்கு மத்தியில் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. அதப்ன்படி, ஏற்கனவே இருந்த 5.25 சதவிகிதம் என்ற அளவு அப்படியே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். பணவியல் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என முடிவு செய்யப்பட்டது. கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆலோனையின் முடிவில், 0.25 சதவிகிதம் அளவிற்கு குறைக்கப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் ஹாப்பி அண்ணாச்சி..
உள்ளூர் வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதமானது ரெப்போ என குறிப்பிடப்படுகிறது. இதற்கான விகிதத்தை ஆர்பிஐ குறைக்கும்போது வங்கிகள் மலிவான விலையில் கடன்களை பெற்று, அதற்கான பலனை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. அந்த வகையில் தற்போது வட்டி விகிதம் மாறாததன் மூலம், வீட்டு கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் உயராது. வாடிக்கையாளர்கள் கூடுதல் மாதாந்திர தவணைகளை செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உணவகங்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் சார்ந்த வணிகங்கள், விமான டிக்கெட்டுகளின் விலை என பல்வேறு பிரிவுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட செலவுகளே அதிகரித்து மாத சம்பளதாரர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்தனர். இந்த நேரத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ஆர்பிஐ அறிவித்து இருப்பது, பொதுமக்கள் மீது விழக்கூடிய கூடுதல் பொருளாதார நெருக்கடிகளை தடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் நான்கு முறை குறைப்பு
பணவியல் கொள்கைக் குழு ஆறு உறுப்பினகளை கொண்டுள்ளது. அதில் மூன்று பேர் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்களாவர். மற்ற மூன்று பேர் அரசால் நியமிக்கப்படுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்த குழு கூடி ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முடிவை எடுப்பர். அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் 4 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.
- 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 6.5 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை என்பது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது
- 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6.25 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டது
- 2025ம் ஆண்டு ஜுன் மாதத்தில் 6 சதவிகிதத்திலிருந்து 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டு 5.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது
- 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5.5 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 5.25 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























