Gas Cylinder Booking: கள்ள சந்தையில் கேஸ் சிலிண்டர்களை பதுக்குவதை தடுக்க,  முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை உயர்த்தியதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் - முன்பதிவிற்கான இடைவெளி நீட்டிப்பு:

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, உள்ளூரில் எரிபொருள் சிலிண்டர் விநியோகத்தை சீராக்க, இந்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, புதிய சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால அளவை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் ஒரு சிலிண்டரை வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவை மேற்கொள்ள நிர்ணயிக்கப்பட்டு இருந்த 21 நாட்கள் என்ற குறைந்தபட்ச கால இடைவெளியானது தற்போது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் பதுக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆசிய கண்டத்தில் குறிப்பாக பிரதான எண்ணெய் விநியோக நாடுகளில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகள் நிலையற்றதாக இருப்பதை கருத்தில் கொண்டு,  விநியோக நடவடிக்கைகளை கடுமையாக்கவும், எரிபொருள் கிடைக்கும் தன்மை குறித்து நுகர்வோருக்கு உறுதியளிக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கேஸ் சிலிண்டர் - இனி 25 நாட்கள் கட்டாயம்:

மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின்படி, இரண்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு இடையேயான கால இடைவெளி 25 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கால இடைவெளியானது வெறும் 21 நாட்களாக இருந்தது. அதற்கும் முன்னதாக வெறும் 15 நாட்களாக மட்டுமே இருந்த இந்த கால இடைவெளியானது சில நாட்களுக்கு முன்பு தான் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய விதிமுறைகளின்படி, பயனர்கள் 24 நாட்களை பூர்த்தி செய்தால் மட்டுமே அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும். எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான பயம் அதிகரிக்கும் போது பொதுமக்கள் பயத்தில் அதிகளவில் வாங்கி குவிக்க முயல்வார்கள். அதனால், சீரான விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

எகிறிய கேஸ் சிலிண்டர் விலை

எண்ணணெய் உற்பத்தி நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, இந்தியாவிற்கான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை அண்மையில் உயர்த்தப்பட்டது. அதன்படி, வீட்டு பயன்பாட்டிற்கான விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 928 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரே ஆண்டு கால இடைவெளியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 114 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு 2 ஆயிரத்து 43 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முன்னதாக மார்ச் மாத தொடக்கத்தில் வணிக சிலிண்டரின் விலை 28 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டுமே வணிக சிலிண்டரின் விலை 302 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளது.