Just In





LPG Cylinder Price: பார்த்தா பாவமா தெரியலையா? வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!
LPG Gas Cylinder Price Hike: விலை அதிகரிப்பால் மானிய விலையில் பெறும் கேஸ் சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்க உள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விலை எவ்வளவு அதிகரிக்கும்?
இதன்மூலம் மானிய விலையில் பெறும் கேஸ் சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்க உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் வீட்டு உபயோக 14.2 கிலோ சிலிண்டரின் விலை 818.50 ரூபாயாக இருந்தது. விலை உயர்வுக்குப் பிறகு நாளை 868.5 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை, 1,965 ரூபாயில் இருந்து 2015 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் மக்களுக்கான சிலிண்டர் விலை 500 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். மேலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்வதால், 41 ஆயிரத்து 338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருவதாகவும் அதை ஈடுகட்டவே கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கலால் வரி உயர்வு
முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இந்த கலால் விலை உயர்வு நாளை (ஏப்ரல் 8ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.