சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து 35,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராமிற்கு 8 ரூபாய் அதிகரித்து 4,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,  24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,819 ரூபாய்க்கும், சவரனுக்கு 38,552 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.73.40-க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி, ABP நாடு தளத்துக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் மூதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.


மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும். ஏனென்றால்,  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.




 


மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே என்று கூறினார்.


கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தங்கத்தின் விலை கடும் உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு, கடந்த மார்ச் வரை தொடர்ந்து சரிவை கண்ட நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.