ஒவ்வொரு மாதமும் இருமுறை சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டரின் விலை 36 ரூபாய் 50 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. 


அதன்படி ஜூலை 6ஆம் தேதி 19 கிலோ எடை சிலிண்டரின் விலை 2177 ரூபாயாக இருந்தது. இந்த விலை தற்போது 2141 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பொதுவாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில்,  ஜூலை 6ஆம் தேதிவீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 1068.50 ரூபாயாக சிலிண்டர் விலை உயர்ந்திருந்தது. தற்போது அந்த விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.


முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனா ஊரடங்கில் இருந்தே பலருக்கும் மத்திய அரசின் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் சிலிண்டருக்கு முழு விலையையும் சாமானிய மக்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.


 






இதற்கிடையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது சமூக உள்ளடக்கத்திற்கான பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிரபலமான முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண