வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30 குறைந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ஒவ்வொரு மாதமும் சந்தை விலைக்கு ஏற்ப வீட்டு உபயோக சிலிண்டர்  மற்றும் வணிக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் மார்ச்  1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையானது ரூ.23.50 உயர்த்தப்பட்டு ரூ.1,960.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் சென்று கொண்டிருக்கிறது. 


தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பு மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இது தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும் சற்றே விலை குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 


இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி  சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.1,930க்கு விற்பனை செய்யப்படுகிறது.