பட்ஜெட் உரைக்கு பிறகு நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று மூன்று அலைகள் மற்றும் வரலாறு காணாத பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட செலவினங்கள் அதிகம். எனினும் 7 ஆண்டுகளிக்கு பின்னர் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. 


 


தற்போது நம்முடைய வருவாய் பற்றாக்குறை 56 ஆயிரம் கோடியாக இருக்கிறது. அதைப்படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய குறிக்கோள். இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.80% சதவிகிதமாக இருக்கும். அது அடுத்தாண்டு 3.6% சதவிகிதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவீனங்களை பொறுத்தவரை அடுத்த ஆண்டு 13.96% உயர்த்தி செலவிட அரசு திட்டமிட்டுள்ளது. கிட்டதட்ட 43ஆயிரம் கோடிகள் அளவிற்கு மூலதனம் செலவுகள் செய்யப்பட உள்ளது. 


 


ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கும் மற்றும் புதிய திட்டங்களும் அதிகளவில் நிதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சிறந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 7ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்விக்கு 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 


 


பெண் குழந்தைகள் குறிப்பாக அரசுப்பள்ளியில் படித்த 46% பேர் மட்டுமே கல்லூரி படிப்பிற்கு செல்கின்றனர். ஆகவே அந்த நிலையை அதிகப்படுத்த ஒரு புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும் இந்த ஊக்க தொகை திட்டம் செல்லும். தற்போது 2ஆம் ஆண்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் இந்தாண்டு ஊக்க தொகை வழங்கப்படும். அரசு பள்ளியில் 6-12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் இளநிலை கல்லூரி படிப்பில் சேரும் போது ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் செய்யும் பொருட்களில் 5% சதவிகிதம் வரை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற புதிய விதியை கொண்டு வந்துள்ளோம். ஏற்றுமதியை ஊக்குவிக்க 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. 


 


தலைபரப்பு குறியீட்டை சில இடங்களில் அதிகரிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. ரியல் எஸ்டேட் பிரிவிற்கு வாய்ப்புகள் வர உள்ளது. விட்டு வசதி வாரியத்தின் பழைய வீடுகளை மறுசீரமைப்பு செய்ய புதிய கொள்கை வர உள்ளது. சிறுகுறு தொழில்களுக்கு சில முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. கடன் தள்ளுப்படி திட்டத்திற்கு 4131 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளோம். சென்னை சுற்றியிலுள்ள அவுட்டர் ரிங் சாலைகளில் வளர்ச்சிக்காக பயன்படுத்த சில திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நலத்திட்டங்களுக்கு போதுமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண