2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அதில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அதே போல  அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும், காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு 496.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், உள்ளிட்ட 120 முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றும், விமர்சித்தும் கருத்துகள் தெரிவித்து இருந்தனர், மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கடும் விமர்சனம் தெரிவித்து இருந்தார்.




அதில், “ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.  அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை.  குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்னதுதான் அது. மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம்,




அத்துடன் எரிவாயு விலையைக் குறைப்பதில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம். இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களேனும் நடைமுறைக்கு வருமா என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயம்தானே? சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும்” என்று விமர்சித்திருந்தார்,