தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்.
TN Budget 2026: தூத்துக்குடி, தொழில்துறைக்கு மெகா ஜாக்பாட்..! அள்ளிக்கொடுத்த அரசு - புதுப்புது திட்டங்கள், வேலைவாய்ப்புகள்
Tamil Nadu Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தூத்துக்குடியில் ரூ.5,200 கோடி செலவில் புதிய கப்பல் கட்டும்தொகுப்பினை நிறுவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு என ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் - தொழில்துறை நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் ஒவ்வொரு துறையிலும் கடந்த 4 ஆண்டுகளில் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் 2026-27 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் வலுவான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பது குறித்தும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கீடு
நிதியமைச்சர் பட்ஜெட் உரையின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எனும் இலக்குடன் இயங்கும் தமிழ்நாடு அரசு, உலக முதலீட்டாளர் மாநாடு, TN-Rising போன்ற முன்னெடுப்புகள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை மிகப்பெரும் அளவில் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், 12.37 லட்சம் கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளனவாம். அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4,282 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழிற்பூங்காக்கள்
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 32,525 ஏக்கர் பரப்பளவில் 24 சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வந்தது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மேலும் 12 புதிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 49,468 ஏக்கர் பரப்பளவில் 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக 28,392 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' மற்றும் சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம்' ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் 706 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய டைடல் பூங்காக்கள்:
திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1,070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. கூடுதலாக விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி, நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மொத்தம் 388 கோடி ரூபாய் செலவில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை பரவலான முறையில் விரிவுபடுத்துவதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
செமி கண்டக்டர் மையம்
'தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030' எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தின் அடிப்படையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) உடன் இணைந்து சென்னை தரமணி பகுதியில், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் (Centre for Advanced Semiconductor Technologies) மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திறன்மிகு மையம் (Centre of Excellence) அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்
கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை' விரைவில் வெளியிடப்படும்போது, கப்பல் கட்டும் தொழிலில் ஒரு உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும். சிப்காட் நிறுவனம் வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுக ஆணையத்துடன் இணைந்து, ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) மூலம் தூத்துக்குடியில் 5,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய கப்பல் கட்டும் தொகுப்பினை நிறுவி வருகிறது. கூடுதலாக, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு உலகளாவிய முன்னணி கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட, முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உறுதியான முதலீட்டுப் பொறுப்புறுதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அரசின் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்:
தூத்துக்குடி துறைமுகம் அருகே சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1800 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு புதிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. அதன்படி, கொச்சின் ஷிப்யார்டு மற்றும் மசகான் டாக் ஆகிய நிறுவனங்கள் முறையே தலா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. துறைமுகத்திற்கு அருகிலேயே தமிழக அரசு மற்றும் சிப்காட் (SIPCOT) மூலம் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், தென் கொரியாவின் HD Hyundai நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புடன், 2047-ம் ஆண்டிற்குள் இந்திய கடல்சார் துறையை உலக அளவில் முன்னணியில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், தமிழகத்தில் கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதையொட்டியே 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை' விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Frequently Asked Questions
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
தமிழ்நாட்டில் எத்தனை சிப்காட் தொழிற்பூங்காக்கள் தற்போது செயல்படுகின்றன?
தமிழ்நாட்டில் தற்போது 54 சிப்காட் தொழிற்பூங்காக்கள் 49,468 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக 28,392 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய டைடல் பூங்காக்கள் எங்கு அமைக்கப்படுகின்றன?
திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1,070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தொகுப்பு எதன் மூலம் நிறுவப்படுகிறது?
தூத்துக்குடியில் சிப்காட் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இணைந்து ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) மூலம் 5,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கப்பல் கட்டும் தொகுப்பை நிறுவி வருகின்றன.
























