2026-2027ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான 9வது பட்ஜெட் இதுவாகும். முதல்முறையாக சுதந்திர இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. அப்போது நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களில் மத்திய அரசின் பொருளாதார தொலைநோக்கு பார்வையை வடிவமைக்கும் மூன்று முக்கிய விஷயங்கள் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக, உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவும்போது, அதன் மீள்தன்மையை மீட்டெடுக்கும் பொருட்டு நிலையான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். சீரான அளவில் வளர்ச்சி பெறக்கூடிய வகையில் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இரண்டாவதாக மக்களின் முழு விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட், வேலைகள், வருமான நிலைத்தன்மை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் போன்ற அன்றாட விஷயங்களில் உண்டாகும் கவலைகளை பூர்த்தி செய்வதையும், பல துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
மூன்றாவதாக உள்ளடக்கிய வளர்ச்சியை வலியுறுத்தும் வகையில் பொருளாதார முன்னேற்றத்தை சமூக நலனுடன் சமநிலைப்படுத்தும் கொள்கைகளுடன் ஒரு துறையின் வளர்ச்சி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சென்றவடைவதில் அரசு உறுதியாக உள்ளது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்த மூன்று விஷயங்களும் வளர்ச்சியை முதன்மை கருவியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. சீர்திருத்த எக்ஸ்பிரஸ் அதன் பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறது. நமது நோக்கத்தை நிறைவேற்ற உதவும் வகையில் அதன் வேகம் இருக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், நிலைநிறுத்தவும் அரசு 7 மூலோபாயத் துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல், பாரம்பரிய தொழில்துறை துறைகளை புத்துயிர் பெறுதல், வெற்றி பெறும் MSMEகளை உருவாக்குதல், உள்கட்டமைப்புக்கு உந்துதல் அளித்தல், நீண்டகால பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நகர பொருளாதாரப் பகுதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
