புதுச்சேரியில் ரூ.10,696 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். முதல்வர் பட்ஜெட்டில் எந்த விதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயது வரை இருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை போல் புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2022‌ - 2023ஆம் ஆண்டிற்கான 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று‌ தொடங்கியது. இதில் புதுச்சேரி முதல்வரும், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ரங்கசாமி ரூபாய் 10,696.61 கோடிக்கணக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் அரசின் அத்தியாவசிய தேவைகளுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் 5 மாதங்களுக்கு ரூ.3,613 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.


அதனையொட்டி புதுச்சேரியில் ரூ.11 கோடிக்கு முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்து, மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் கால தாமதமாகியது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி திட்டமிட்டபடி சட்டப்பேரவை கூடியது. அதில் 2022 - 2023ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.


முன்னதாக நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கக் கால தாமதமாகியதைத்  தொடர்ந்து, அன்றைய தினமே சட்டப்பேரவை தலைவர் செல்வம் பேரவையைக் காலவரையின்றி ஒத்திவைத்தார். இந்த நிலையில் புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் ரூபாய் 11 ஆயிரம் கோடிக்கு நிதி ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், அதில் ரூபாய் 10,696.61 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை மீண்டும் இன்று கூடியது.


இதில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து  உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாளை முதல் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. வருகிற 30-ந்தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:



  1. கல்வித் துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் துறை பிரிவு தனித் துறையாக துவங்கப்படும்.

  2. புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவங்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

  3. ரூ.1,596 கோடி மின் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  4. தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த துறைக்கு ரூபாய் 31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  5. புதுச்சேரி கடற் பகுதியில் மிதக்கும் படகுத் துறை அமைக்கப்படும்.

  6. காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ரூ.80 கோடியில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்டப்படும்.

  7. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள ஆவணங்கள் சொத்துக்களை டிஜிட்டல் செய்து பாதுகாக்கப்படும்.

  8. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடி வழங்கப்படும்.

  9. பொதுமக்கள் அரசு போக்கு வரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில்  25 இ-பேருந்துகள்  50 இ-ஆட்டோக்கள் வாங்கப்படும்.

  10. புதுச்சேரி காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்படும்.

  11. காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசம் துறைமுகத்திற்குப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து இந்தாண்டு தொடங்கப்படும். சென்னை - புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை இந்தாண்டில் தொடங்க தனியார் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.

  12. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும்.

  13. எந்த விதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயது வரை இருக்கும் வருமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.