இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வீரப்பனை அடிப்படையாக வைத்து இதுவரை சில படங்களும், நாடகங்களும், சிரீஸ்களும் வந்துள்ளன. இவை அனைத்தும், வீரப்பனை பற்றி பரவி வந்த தகவல்களையும், போலீஸ் மத்தியில் நிலவிய கதைகளையும், வதந்திகளையும் அடிப்படையாக வைத்தே எடுக்கபட்டன. இந்நிலையில், ஜி5 ஓடிடி தளத்தில் கூச முனிசாமி வீரப்பன் எனும் ஆவணப்பட சீரிஸின் முதல் சீசன் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது. இந்த சீரிஸ் பற்றிய விரிவான விமர்சனத்தை இங்கு காணலாம். 


வீரப்பனை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நக்கீரன் கோபால் விளக்கம் கொடுக்க சீரிஸ் தொடங்குகிறது. இந்த கதையின் முன்னணி கதாபாத்திரமான, வீரப்பனே இதை நரேட் செய்கிறார். இப்படியாக அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது.


முதல் எபிசோடு - பர்ஸ்ட் ப்ளட் 


வீரப்பன் பிறந்து வளர்ந்த கதை, வீரப்பனின்  குடும்பத்தினர் பற்றிய அறிமுகம், சாதாரண வேட்டைக்காரன் கடத்தல்காரனாக மாறிய கதை, வீரப்பனின் வாழ்வில் நுழைந்த அரசியல், கொலைக்கு தூண்டிய தாயின் மறைவு போன்றவற்றை விவரிக்கிறது முதல் எபிசோடு.


இரண்டாம் எபிசோடு - இன் டூ தி வைல்ட் 


வீரப்பனுக்கு ஆயுதங்களை வாங்கி கொடுத்த பவானி எனும் ராஜமணியின் கதை, வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸின் அறிமுகம், சந்தன கடத்தல் செய்வதற்கான காரணம், ஹரிகிருஷ்ணா, ஷக்கீல் அஹமத் ஆகிய காவல் அதிகாரிகளின் அறிமுகம், வீரப்பனின் தங்கை மாரியம்மாளின் மறைவு ஆகியவை இந்த எபிசோடில் விவரிக்கப்படுகிறது.


மூன்றாவது எபிசோடு - தி வார்


வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸின் கொலை, கர்நாடக - தமிழகத்திற்கு இடையே நடக்கும் காவிரி பிரச்சினை, காவல் அதிகாரி கோபால கிருஷ்ணனின் அறிமுகம், 15 போலீஸ் உள்பட 22 நபர்களை வீரப்பன் குண்டு வைத்து கொலை செய்வது, அந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பம் பேசுவது போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்று இருக்கும்




நான்காவது எபிசோடு - தி ஹண்ட் ஃபார்


வீரப்பனை தேடும் அரசாங்கம், சிறப்பு அதிரப்படையை நியமிப்பது, அதிரப்படை செய்யும் கொடுமைகளை விளக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், சதாசிவா பேனல்,  நடிகர் ராஜ்குமார் கடத்தல் போன்றவை இந்த நான்காவது எபிசோடில் விளக்கப்பட்டிருக்கும்


ஜந்தாவது எபிசோடு - பையிட் வார்ம்ஸ்


காவல்துறைக்கு தகவல் கொடுப்பவர்களை வீரப்பன் கொலை செய்வது பற்றியே இந்த எபிசோடில் காண்பிக்கப்பட்டிருக்கும்.


ஆறாவது எபிசோடு - தி பிகினிங்


வீரப்பனை பற்றிய தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள், அரசியல் குறித்த வீரப்பனின் கருத்துகள், ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வீரப்பன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தேர்தலில் எதிர்த்து நிற்க சவால் விடுவது என ஷாக் கொடுக்கும் காட்சிகள் இதில் இடம்பெற்று இருக்கும்.


கூச முனிசாமி வீரப்பன் சிரீஸ் எப்படி இருக்கு? 


அனைவரும் ஆவணப்படங்கள் பார்க்க ஆர்வமாக இருக்கமாட்டார்கள். அவை ஒரு கட்டத்தில் போர் அடித்து விடும். ஆனால், இந்த சிரீஸ் பொறுத்தவரை அந்த பிரச்சினை இல்லை. ஏனென்றால், இந்த ஆவணப்படம் திரை அனுபவத்தையும் தருகிறது. வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை சேகரித்து, அத்துடன் சில காட்சிகளை சித்தரித்து, தற்போதைய காலத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வீரப்பன் வழக்கில் தொடர்புள்ள அதிகாரிகளின் பேட்டியை இணைத்து மக்களுக்கு கொடுத்துள்ளது கூச முனிசாமி வீரப்பன் சிரீஸ் குழு. 




சிரீஸ் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது.  சீரிஸை எப்படி தொடங்கி எப்படி கொண்டு சென்று எப்படி முடிக்க வேண்டும் என்ற சிந்தனை போக்கு, மக்களின் புரிதலுக்காக பயன்படுத்தப்பட்ட வரைப்பட கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை இதன் ஹைலைட்ஸ்.


கூச முனுசாமி வீரப்பன் மற்ற படைப்புகளில் இருந்து தனித்து நிற்கிறதா?


இந்த கேள்விக்கு மிகப்பெரிய ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை வீரப்பனை அடிப்படையாக கொண்டு உருவான படைப்புகளில் இல்லாத ஒன்று இதில் எக்ஸ்ளூசிவாக இருக்கிறது. நக்கீரன் கோபால், இத்தனை ஆண்டுகளாக காப்பற்றி வைத்திருந்த எண்ணற்ற ஒர்ஜினல் ஃபுட்டேஜ்தான் இந்த சிரீஸை மற்ற படைப்புகளில் இருந்து தனித்து நிற்க வைக்கிறது.


வீரப்பனே, தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு வரலாற்றை விளக்குவதே இதன் பெரிய பிளஸ். இதற்கு முன் எடுக்கப்பட்ட பல படைப்புகள், ஒரு தலைப்பட்சமாகவே எடுக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல. இன்றும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படைப்பும் வீரப்பனை நியாயப்படுத்தி ப்ரோ நக்கீரன் சிரீஸாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், இந்த சிரீஸ் ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் அனைத்து தரப்பினரின் பார்வையையும் உள்ளடக்கி, பதிலை பார்வையாளர்களான நம்மிடத்தில் கொடுத்து விடுகிறது.


வீரப்பனை பற்றி ஏதேதோ கேட்டு வளர்ந்திருப்போம். ஒரு தரப்பினர், அவரை கடவுளுக்கு நிகராக வணங்க மற்றொரு தரப்பினர் அவரை இகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் நல்லவரா? அல்லது கெட்டவரா? என்ற கேள்விக்குள் செல்லாமல், நிஜமாகவே வீரப்பன் இப்படிதான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதே கூச முனுசாமி வீரப்பன்.


ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய காட்சிகள்


 




வீரப்பனுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பிரச்சினை இருந்தது பலருக்கும் தெரியும். ஆனால், இதற்கு இடையில் மாட்டிக்கொண்டு படாதபாடுப்பட்ட குரலற்ற மக்களின் துயர் பலருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில், அவர்கள் அனுபவித்த கொடுமைகளை பற்றி விவரிக்கும் போது ஈரக்கொலை நடுங்கியது. போர் நடக்கும் நாடுகளில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். 


வீரப்பனுக்கும் அரசாங்கத்திற்கும் நடுவே நடந்த போரில், ரண கொடூரமான விஷயங்களை ஆழ் மனதில் பொருத்திப்பார்க்கும் அளவிற்கு சிரீஸில் எடுத்து சொன்னதற்கு பெரும் பாராட்டுகள்.


வீரப்பனின் மற்றொரு முகம் 


வீரப்பன், ஒரு கொலைக்காரன், கடத்தல்காரன், தீவரவாதி போன்ற அடுக்கடுக்கான பட்டங்கள் கொடுக்கபட்ட நிலையில், சிலர் அறிந்த அரிதான விஷயங்களையும் இந்த சிரீஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.


வீரப்பன் நல்ல நகைச்சுவை திறன் கொண்டவர் என்பது அவர் பேசுவதை வைத்து தெரிந்துகொள்ளலாம். அத்துடன் அவருக்கு பீடி, போதை பொருள் பழக்கம் கிடையாதாம். அவருக்கு அந்த வாடையே பிடிக்காது என்று இதில் கூறியுள்ளனர். நடனம் ஆடுவது, அரசியலில் இருக்கும் ஆர்வம், பிரதமராக வேண்டி ஆசைப்பட்டது, காட்டை பற்றிய விசாலமான அறிவு, பகுத்தறிவு என அனைத்தும் ஷாக் கொடுத்தது. 


இந்த சீரிஸை ஏன் பார்க்க வேண்டும்?


6 எபிசோடுகளை கொண்ட இந்த சிரீஸை பார்த்து முடிக்க 4 மணி நேரம் தேவைப்படும். இதை பார்க்க உங்கள் நேரத்தை தாராளமாக செலவிடலாம். ஒரு பக்கம் பொழுதுபோக்காக இருப்பதுடன், இரத்தக்கறை படிந்த உண்மையான வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.