தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவில் 6-ம் நாளில் நடைபெற்ற நற்கருணை பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 440-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகளும். மாலையில் செபமாலை, மறையுரை நற்கருணை ஆசீரும் நடைபெற்று வருகிறது.




இந்நிலையில், 6-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு  ஆயர் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடைபெற்றது. இதில் பள்ளிக் குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தை ஆயர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மலையாளத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.




தொடர்ந்து காலை 11.30 மணிக்கு முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கடலோர கிராம மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு செபமாலை வழிபாடும், அதைத் தொடர்ந்து ஆயர் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணையை ஆயர் ஸ்டீபன் கையிலேந்தி, பெரிய கோயில் தெரு, செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, விக்டோரியா தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வந்தார். தொடர்ந்து பேராலயத்தில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நற்கருணை பவனியை முன்னிட்டு போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




திருவிழாவின் 10-ம் நாளான ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 7 மணிக்கு ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நகரின் முக்கிய வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி 11-ம் திருநாளான ஆகஸ்ட் 5-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக அன்று காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குத்தந்தை பால் ரோமன் மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.


தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதற்கு பதிலாக 13-08-22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண