உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் வருகிற மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

 

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலுக்குட்பட்ட கமலாலயகுளத்தின் தென்கரை பகுதி சேதமடைந்துள்ளதனை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கமலாலய திருக்குளத்தின் தென்கரை பகுதி சீரமைப்பு பணி மற்றும் ஆழித்தேரோட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அரசு செயலாளர் சந்திரமோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவர் கௌதமன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன்  முன்னிலை வகித்தனர். பின்னர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது…



கமலாலயம் என்னும் இச்சிறப்பு மிகுந்த இத்திருக்குளம் தொன்மை காலம் முதல் புராண, வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றுடன் நெருக்கிய தொடர்புடைய ஒன்றாகும். இத்திருக்குளமானது வடக்கு, தெற்கு திசைகளில் 1060 அடியும், கிழக்கு, மேற்கு திசைகளில் 790 அடியும் அளவுகள் கொண்ட பெரிய தெப்பக்குளமாக உள்ளது. கடந்த 25.10.2021 அன்று பெய்த கனமழையின் காரணமாக தென்கிழக்கு மூலையின் மதில்சுவரின் ஒரு பகுதி 101 அடி சரிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, மேலும் 47 அடி சுவர் சேதமடைந்துள்ளது. இப்பகுதியினை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்ப்பட்டதன் அடிப்படையில் ரூ.77 இலட்சம் மதிப்பீட்டில் 148 அடி சுவர் மீண்டும் அமைத்திட நிர்வாக ரீதியாக இந்து சமய அறநிலைய துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் துவக்கப்படவுள்ளது. இக்கட்டுமான பணிகள் தொடர்பாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.   



தமிழகத்தில் சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தொன்மை மிகு நகர்களுள் ஆரூர் தனி சிறப்பிடம் பெற்றது. தமிழகத் திருக்கோவில்களில் இக்கோவில் மிகவும் தொன்மையானதாகும். இத்திருக்கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்சமாக பிரதானமானது ஆழித்தேராகும். தமிழகத்திலுள்ள தேர்களில் திருமுறையில் பாடப்பெற்ற பெருமை இத்திருக்கோவிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. இத்தேரானது இதர திருக்கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலின் ஆழித்தேர் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ பெருவிழாவின் நிறைவாக நடைபெற்று வருகிறது. இத்தேர்விழாவானது கடந்த 25.03.2021 ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 15.03.2022 அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே, ஆழித்தேரோட்ட விழாவிற்கு முன்பாகவே பழுதடைந்த தென்கரை சுற்றுசுவர் மற்றும் தெற்கு வடம்போக்கி வீதி சாலையினை சீரமைத்து ஆழித்தேரோட்டத்தினை சிறப்பாக நடத்திட அனைத்துவகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்தார். முன்னதாக,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திருவாரூர் ஒன்றியம், திருக்காரவாசல் கிராமத்திலுள்ள  தியாகராஜர் சுவாமி திருக்கோவிலின் கோவில் குளம் மற்றும் தேரினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.