ஜோதிடத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு பெயர்ச்சிகளும் ஒவ்வொரு ராசியிலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில், ஒவ்வொரு ராசியிலும் மிகப்பெரிய ஏற்றத்தையும், இறக்கத்தையும் உண்டாக்கும் பெயர்ச்சியாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி ஆகும்.
சனிப்பெயர்ச்சி எப்போது?
நடப்பாண்டில் சனிப்பெயர்ச்சி மார்ச் மாதம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படீ, வரும் மார்ச் 6ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அதாவது, சனி பகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார்.
பொதுவாக, சனிப்பெயர்ச்சி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டாலும், சனிப்பெயர்ச்சி என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது திருநள்ளாறு கோயிலே ஆகும். திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இந்த சனிப்பெயர்ச்சி மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
எந்த ராசியில் சஞ்சாரம்?
அதற்காக, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. சனி பகவான் பொதுவாக ஒவ்வொரு ராசியிலும் குறைந்தது இரண்டரை அல்லது 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்வது வழக்கம். மீன ராசியில் வரும் 2029ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சனி பகவான் சஞ்சாரம் செய்வார்.
பொதுவாக, சனிப்பெயர்ச்சி என்பது அந்த ராசியினரின் வாழ்க்கை மட்டுமின்றி அந்த ராசிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இதன்படி, ஏழரை சனி நடந்து வரும் கும்ப ராசிக்கு சனி பகவானின் பாத சனி காலம் தொடங்கும். மீன ராசிக்கு விரய சனி காலம் முடிந்து ஜென்ம சனி காலம் தொடங்குகிறது. மேஷ ராசியினருக்கு சனி காலத்தின் முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது.
Sani Peyarchi 2026 Palangal in Tamil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026
தாக்கம் இருக்குமா?
இதனால், இந்த 3 ராசியினருக்கும் உடல்நிலை, வேலை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்றங்களும், இறக்கங்களும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், சனி பகவானை கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திருநள்ளாறில் நடக்கும் சனிப்பெயர்ச்சி வழிபாடுகளில் பங்கேற்க பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், அவர்கள் சிரமின்றி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
திருநள்ளாறு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற கோயில்களிலும் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் அதிகளவு குவிவார்கள் என்று கருதப்படும் கோயில்களில் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
