உலக பிரசித்தி பெற்ற வரதராஜா பெருமாள் கோவில் 40 ஆண்டுகள் ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் 2019 ஆம் ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை உலகம் முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் வரதராஜ பெருமாள் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.

 

இந்நிலையில் மிக முக்கிய உற்சவமான இன்று ஏழாம் நாள் உற்சவத்தின் திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோவில் வாகன மண்டபத்தில் வரதராஜ பெருமாள் நீளம் மற்றும் ரோஸ் நிற பட்டு உடுத்தி தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டு பூதேவி, ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி பாதங்கள் தாங்கி திருத்தேர் கொண்டுவரப்பட்டு திருத்தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

 

சுமார் 73 அடி உயரமுள்ள 7 நிலைகொண்ட சிற்பங்கள் வேலைப்பாடுகள் கொண்ட தேர் உற்சவம் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழியெங்கும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 


வரதராஜ பெருமாள் கோயில் காஞ்சிபுரம்

 

வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலய மூலவருக்கு தேவராஜபெருமாள் என்று பெயர். உற்சவரை பேரருளாளன் என்று அழைக்கிறார்கள். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர் சூட்டி உள்ளனர். இத்தலத்து பெருமாள் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக 24 படிகளை ஏறிச்சென்று தரிசிக்க வேண்டி உள்ளது. பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நின்று அருள்பாலிப்பதாக பக்தர்கள் வழிபடுகின்றனர்

 

அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில், போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது