உலக பிரசித்தி பெற்ற,பஞ்ச பூத ஸ்தலங்களில் முதன்மையான மண் ஸ்தலமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் விளங்குகிறது.இத்திருக்கோயிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். சுற்றுல்லா ஸ்த்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் மனமுறுகி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.



ஒவ்வொரு கோயிலுக்கும் ஸ்தல விருட்சம் என்று ஒரு மரம் உண்டு.அந்த வகையில், பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஸ்தவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று கருவறைக்கு பின்புற பிரகாரத்தில்  உள்ளது. இம்மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு 4 வேதங்களை குறிக்கும் தெய்வீக மாமரம் என நம்பப்படுகிறது. இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகின்றன, என பக்தர்கள் மற்றும் பொது மக்களால் நம்பப்படுகிறது.



இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் காட்சியளிக்கிறார். இதன் சிறப்பு அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தார் என சொல்ப்படுகிறது. இதனாலேயே இன்றும் இங்கு பல ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் மகப்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

 



தற்போது,  இம்மாமரத்தில் 4 சுவையுடன் கூடிய மாங்கனிகள் காய்க்கத் தொடங்கி உள்ளது. இந்த அதிசய மாமரத்தினை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பார்த்து வியந்து சென்று வருகின்றனர். இந்த மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழமை என கூறப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மா மரம் பட்டுப் போனது, இதனைத் தொடர்ந்து உயிரியல் துறை நிபுணர்கள் மூலம் மீண்டும் இந்த மரம் உயிர்ப்பிக்கபட்டது. இந்த நிலையில்தான் தற்போது இந்த மாதத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்கிய உள்ளன. மாமரத்தில் மாங்காய் வைத்துள்ளதை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன், மாமரத்தை வணங்கி செல்கின்றனர்.