2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏஐ கருவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2027-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 16ஆவது நிதிக்குழு அறிக்கையையும் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏஐ கருவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். 

கிராமங்களில் she mart கடைகள்

கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் பொருட்களை விற்க she mart கடைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நடப்படும் என்றும் 3 கோடி மக்கள் தேங்காய் உற்பத்தியை சார்ந்து இருப்பதாலும், உலகத்திலேயே தேங்காய் உற்பத்தியில் முதன்மை நாடாக இந்தியா திகழ்வதால் அவற்றை மேம்படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு 5 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. நெல்லை பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா தலம் அமைக்கப்படும்.

2. ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் மற்றும் கலாச்சார ஆய்வு மையம் அமைக்கப்படும்.

3. பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிப்பதற்காக 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பறவைகளை காண்பதற்கான பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும்.

4.  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை மற்றும் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க தனித் திட்டம் ஏற்படுத்தப்படும்.

5. சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு அதிவேக ரயில் இயக்கப்படும்.

முன்னதாக கிராமங்களில் காதி, தொழிலை வளர்க்க மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில், மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விபி ஜி ராம்  ஜி என பெயரிட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த நிலையில், மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாட்டில் அரியவகை தாதுக்கள் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.